×

வங்கியிலிருந்து அசல் ஆவணங்கள் சமர்ப்பிக்கும்வரை விசாரணையை நிறுத்திவைக்க செந்தில் பாலாஜி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்பிக்கப்படும் வரை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வைக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் மீண்டும் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், வங்கி ஆவணங்களை வழங்கி அதன் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்ற முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, கடந்த 22ம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு வங்கி தொடர்பான அசல் ஆவணங்களை வழங்கினார். இதையடுத்து, இரு தரப்பிலும் வாதங்கள் முடிந்து ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அசல் செலான்களை வழங்க உத்தரவிட்ட நிலையில், வங்கி தாக்கல் செய்த செலான்களில் இரண்டு செலான்கள் நகலெடுக்கப்பட்டவை என்பதால் நீதிமன்ற உத்தரவுப்படி அசல் செலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் அதுவரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்றும் செந்தில் பாலாஜி தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.அல்லி நேற்று விசாரித்து, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4க்கு தள்ளி வைத்தார். இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 4 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 36வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வங்கியிலிருந்து அசல் ஆவணங்கள் சமர்ப்பிக்கும்வரை விசாரணையை நிறுத்திவைக்க செந்தில் பாலாஜி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : SENTHIL BALAJI ,ICOURT ,ENFORCEMENT DEPARTMENT ,Chennai ,Chennai District Primary Session for the Enforcement Department ,Sentil Balaji ,Enforcement ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...